பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
10:04
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் புனித நீராட வரும் பக்தர்களுக்கு, கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள சுகாதார சீர்கேட்டை கண்டு பக்தர்கள் மனம் வெதும்பி புலம்புகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் புண்ணிய தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு அருகே சேதுக்கரை கடல் அமைந்துள்ளதால் பக்தர்கள் புனித நீராடி செல்கின்றனர். இது தவிர, தை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களது ஆத்மா சாந்தியடைய புனித நீராடி தர்ப்பணம் செய்கின்றனர். பல்வேறு முக்கியத்துவம் பெற்ற சேதுக்கரையில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பது பக்தர்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது. இங்குள்ள உடை மாற்றும் அறை கழிப்பறையாகவும், மாலை நேரங்களில் ஆடு, மாடு அடையும் தொழுவமாகவும் மாறுகிறது. இதனால் உடை மாற்றுவதற்கும் இடமில்லாமல், திறந்தவெளியை பயன்படுத்தும் நிலையில் பக்தர்கள் உள்ளனர். கடலில் நீராடுபவர்கள் விட்டுச்செல்லும் உடைகள், பிதுர் காரியங்களுக்காக பயன்படுத்தும் உடைந்த மண்சட்டிகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. சிவகங்கை ஜானகி அம்மாள் கூறியதாவது: பல ஆண்டுகளாக சேதுக்கரை இதே நிலையில் இருக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது. இதுகுறித்து கடந்தாண்டு கலெக்டருக்கும் மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, சுகாதார சீர்க்கேடை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். திருப்புல்லாணி பி.டி.ஓ., மணிமேகலை கூறியதாவது: அடிப்படை வசதி செய்வதற்காக, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு வந்ததும், பணி துவங்கப்படும், என்றார்.