பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
11:04
நாமக்கல்: நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு அடுத்த தாளாம்பாடியில் மாரியம்மன், பாட்டாளம்மன், தக்காளம்மன், நாகேந்திரர் மற்றும் விநாயாகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விழா ஏப்ரல், 5ம் தேதி இரவு, 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. முன்னதாக மாலை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூசாரியை கோவிலுக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை, ஸ்வாமிக்கு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏப்ரல், 7ம் தேதி காலை 10 மணிக்கு மோகனூர் காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரப்புரப்படுதல், மாலை 4 மணிக்கு தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவிலை அடைகின்றனர். அன்று இரவு, 8 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கையும் நடக்கிறது. ஏப்ரல், 8ம் தேதி காலை, 9 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலம் வருதல், அம்மன் சக்தி அழைத்தல், கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. ஏப்ரல் 9ம் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை, 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.