பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
10:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று சாகைவார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோவிலில் நேற்று மாலை 4.15 மணிக்கு சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு கூவாகம், தொட்டி, நத்தம், அண்ணாநகர் உட்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டனர். இன்று (10ம் தேதி) பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சியும், 11ம் தேதி சந்தனு சரிதம், 12ம்தேதி பீஷ்மர் பிறப்பு, 13ம்தேதி தர்மர் பிறப்பு, 14ம்தேதி பாஞ்சாலி பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து 15ம்தேதி பகாசூரன் வதம், 16ம் தேதி பாஞ்சாலி திருமணம், 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 18ம் தேதி ராஜசூயயாகம் ஆகிய நிகழ்ச்சிகளும், 19ம் தேதி வெள்ளிக்கால் நடுதல், 20ம் தேதி கிருஷ்ணன்தூது, 21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 22ம் தேதி கம்பம் நிறுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. முக்கிய திருவிழாவாக 23ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். வரும் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கும் தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை எம்.எம்.ஏ., குமரகுரு வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். தொடர்ந்து நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடைகிறது. அங்கு பகல் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து விதவைக் கோலம் பூண்டு அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர். மாலை 5 மணிக்கு உறுமைசோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர். இரவு 7 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்குச் கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். தொடர்ந்து 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி இம்மாதம் 10ம் தேதி முதல் 26ம் தேதி வரை மகாபாரத சொற்பொழிவுகள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
சுப நிகழ்ச்சிகளுக்கு தடை: மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடப்பதால் கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர். இதே வேளையில் கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் வழி படுகின்றனர்.