ராசிபுரம்: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த சாட்டை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பூசாரியிடம் சாட்டையடி வாங்கி ஆசி பெற்றுச் சென்றனர். ராசிபுரம் அருகே, சீராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஏப்ரல், 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. அப்போது, பக்தர்களுக்கு கோவில் பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூவோடு ஏந்தி வந்து பூசாரியிடம் சாட்டையில் அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். சாட்டை அடி வாங்குவதன் மூலம் நோய், தீய சக்திகள் விலகி குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இன்று பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை தீ மிதி விழாவும் நடக்கிறது. வரும், 11ம் தேதி இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.