பதிவு செய்த நாள்
02
மே
2013
10:05
சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேங்கைமரத்து பெரிய நாச்சியம்மனுக்கு, கருங்கல்லில் தோசை சுட்டு படையிலிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திகோம்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லிமலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற வேங்கைமரத்து பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இக்கோவில் திருவிழா, வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டு விழா, இரண்டு நாட்களுக்கு முன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள பெரிய நாச்சியம்மன் ஸ்வாமிக்கு, பச்சரிசி மாவு, வெல்லம், நெய் கலந்து, கருங்கல்லில் தோசை சுட்டு, படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, செம்மறி ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இவ்விழாவில், நடுபரப்பு, புளியங்காடு, மேட்டூர், புதுவலவு, ஆச்சாவாடி, வால்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.