பதிவு செய்த நாள்
02
மே
2013
10:05
திருவள்ளூர்: வீரராகவர் கோவில் சார்பில், திருவள்ளூரில் கட்டப்பட்ட கோசாலை நேற்று திறக்கப்பட்டது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம், அமாவாசை தினத்தன்று இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ஆகியவை, இங்கு முக்கிய விசேஷங்களாகும்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பசுக்களை கோவிலுக்கு தானமாக கொடுக்கின்றனர். இப்பசுக்கள் கோவில் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பசுக்கள் மூலம் கறக்கப்படும் பாலைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யவும், பிரசாதம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தானமாக அளிக்கப்படும் மாடுகள், கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. தற்போது, அங்கு இடநெருக்கடி ஏற்பட்டதையடுத்து, வீரராகவர் கோவில் தேவஸ்தானம் சார்பில், ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தானப்ப நாயக்கன் மண்டபத்தில், புதிய கோசாலை கட்டப்பட்டது. ஒன்றேகால் ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட, புதிய கோசாலையின் திறப்பு விழா நேற்று காலை, 9:00 மணிக்கு நடைபெற்றது.ஆட்சியர் வீர ராகவ ராவ் இந்த கோசாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோவிலின் கவுரவ ஏஜன்ட் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.