பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கமலாம்பிகை சமேத ஸ்ரீகாயாரோகணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (2ம் தேதி) நடைபெற உள்ளது.காஞ்சிபுரம், கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில், கமலாம்பிகை சமேத ஸ்ரீகாயாரோகணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், பல்லவ மன்னரால் கட்டப்பட்டது. இரண்டாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்டது. திருமால், பிரமன் ஆகியோரை, காலகாலனாகிய சிவபெருமான் ஒடுக்கி, அவர்கள் சரீரத்தை தனது தோள்மேல் தாங்கி, அங்கு நடனம் செய்ததால், காயாரோகணம் (காயம் - உடல்; ஆரோகணம் - ஏறுதல்) என, பெயர் பெற்றார்.இங்குள்ள இறைவனை வில்வத்தால் வழிபட்டு, லட்சுமி திருமாலை தனக்கு கணவனாகப் பெற்றாள். குருபகவான் சிவனை வழிபட்டு, தேவர்க்கு குருவாகும் தன்மை பெற்றார். இமயன் வழிபட்டு, தென்திசைக்கு தலைவனாகும் பேறு பெற்றார்.
கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை அமைந்துள்ள கட்டடத்தின் நுழைவுவாயில், தெற்கு நோக்கியும், மூலவர் கிழக்கு நோக்கி அமர்ந்தும் காட்சிளிக்கிறார். விநாயகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், மகாலட்சுமி, சூரியன், பைரவர், குருபகவான் (பிரகஸ்பதி) ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகம், இன்று (2ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் 29ம் தேதி காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹேமம், தனபூஜை, கோபூஜையுடன் துவங்கியது. 30ம்தேதி காலை 8:00 மணிக்கு, யாகசாலை நிர்மாணம், பிரபசுத்தி, இரவு 8:00 மணிக்கு, பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது.மே 1ம் தேதி, விசேஷசந்தி, யாகசாலை பூஜை, இரண்டாம் காலம் அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை 5:00மணிக்கு, மூன்றாம் காலம் தத்வார்ச்சனை நாடிசந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நாளான இன்று, காலை 5:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், அதைத் தொடர்ந்து, மகாபூர்ணாஹூதியும், 8:00 மணிக்கு, விமானம் கோபுரம் கும்பாபிஷேகமும், 8:20 மணிக்கு, மூலவர் பரிவார கும்பாபிஷேகமும், 11:00 மணிக்கு, மகாபிஷேகமும், மாலை 6:00மணிக்கு, திருக்கல்யாணம் உற்சவமும், அதைத் தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், ஸ்ரீகாயாரோகணீஸ்வரர் (குருகோவில்) கோவில் வழிபாட்டு சங்கத்தினர் மற்றும் ஸ்ரீகாயாரோகணீஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு அறக்கட்டளை நிர்வாகமும் இணைந்து செய்துள்ளன.