பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
ஓசூர்: கெலமங்கலம் அருகே கோவில் விழாவில், குழந்தை வரம் கிடைக்கவும், பேய் பிசாசுகளை விரட்டவும், பூசாரியிடம், முறம், துடப்பத்தால் பெண்கள், அடி வாங்கி நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். கெலமங்கலம் அடுத்த டி.கொத்தப்பள்ளி தர்மராயர் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, மூலவர் தர்மராயர், விநாயகர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பல்லக்கில் தர்மராயர், விநாயகர் தேரில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பக்தர்கள், வாழைபழம், மஞ்சள், குங்குமம், துளசி செடிகளை, தேர் மீது வீசி, ஸ்வாமிகளை வழிபட்டனர். தேர் நிலைக்கு வந்ததும், கரம்மா, காளிகாம்மாள் ஆகிய கிராம தேவதைகளுக்கு, பக்தர்கள் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு வேண்டுதல்கள் நிமித்தமாகவும், கோவில் பூசாரியிடம், தலை மற்றும் முதுகில் முறம், துடப்பத்தால் அடிவாங்கி, நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்களும், தொழில் வளம் பெருக, கடன் பிரச்னைகள் தீர வரிசையில் நின்று பூசாரியிடம் துடப்பத்தால் அடிவாங்கினர். இரவு, 7 மணிக்கு, "குருஷேத்திரம் நாடகம் நடந்தது. இன்று (மே 2) விழாவின் தொடர்ச்சியாக பல்லக்கு உற்சவம், தீ மிதித்தல், கரக திருவிழா நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.