பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
ஈரோடு: ஈரோடு பாரதி நகர் ராஜகணபதி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகர் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா, ஏப்ரல், 30ம் தேதி, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. அன்று காலை, 7.30 மணி முதல் பல்வேறு பூஜைகள், முதற்கட்ட யாகசாலை வேள்வி நடந்தது. நேற்று காலை, 4 மணிக்கு விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, விஷேச திரவிய ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. காலை, 6.45க்கு ராஜகணபதி, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர், அபிராமி, அமிர்தகடையீஸ்வரர், நவக்கிரகம் ஆகிய மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அவல்பூந்துறை, சிவாலயம் சிவஞானகுருக்கள் பங்கேற்று, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டல தலைவர் மனோகரன், கவுன்சிலர் கவிதாரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.