சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2013 11:05
கடையநல்லூர்: சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் 13வது ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 19ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பூக்குழி திருவிழாவில் பூக்குழி இறங்குவதற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு நாள்தோறும் விசேஷ அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பூக்குழியை முன்னிட்டு நேற்று மாலை 5மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது. மாலை ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்கிட ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். கடையநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், புளியங்குடி, தென்காசி, சங்கரன்கோவில், தலைவன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன்,சுரேஷ்குமார், முத்துலட்சுமி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.