பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை சிறப்பபு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை சமய உரை மற்றும் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணியளவில் வாகன பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. திருவிழாவில் 9ம் நாளான நாளை (23ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் தேர் திருவிழா நடக்கிறது. தேரோட்டத்தை வனத்துறை அமைச்சர் பச்சைமால் வடம் தொட்டு தொடங்கி வைக்கிறார். எஸ்.பி., மணிவண்ணன், கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர். பகல் 12 மணியளவில் அன்னதானம், மாலை 6 மணிக்கு மண்டகபடி, இரவு 7.30க்கு பக்தி இன்னிசை மற்றும் பஜனை, 9 மணிக்கு வெள்ளிகலைமான் வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல் ஆகியன நடக்கிறது. ஆராட்டு 10ம் நாள் விழாவான 24ம் தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் ஆராட்டு எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6 மணிக்கு சமய உரை, 7 மணிக்கு பக்தி பஜனை, 9க்கு பூப்பந்தல் வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல், 10க்கு அம்மன் தெப்பத்திற்கு எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூல வெங்கடேசன், கன்னியாகுமரி கோவில் மேலாளர் சோணாச்சலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.