பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பக்க வளாகத்தில், பக்தர்களின் வசதிக்காக, "ஷெட் அமைத்துக் கொடுப்பதில், நிர்வாகம் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சத்தி, பர்கூர், பவானி ரோடு சந்திக்கும் மும்முனை ரோட்டுக்கு எதிரில், மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அந்தியூரை திப்பு சுல்தான் ஆண்டபோது, செல்லீஸ்வரர் வகையறாவுக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன், ஈஸ்வரன், பெருமாள் கோவிலை கட்டினார் என கூறப்படுகிறது. ஈஸ்வரன் கோவிலை சுற்றியுள்ள மண் கோட்டையே இதற்கு சாட்சி. தற்போது, மண் கோட்டை முற்றிலும் அழிந்துவிட்டது. அறநிலையத்துறை நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில் நிர்வாகத்தின் மூலம், எருமைக்கிடாக்கள் ஏலம், பூ, ஊதுபத்தி, சாம்பிராணி, தேங்காய் விற்பனை கடைகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையினங்களில் டெண்டர் விடப்படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள் மூலம், ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருவாய் உள்ளது. ஆண்டுதோறும் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, பங்குனி மாதத்தில் வெகு விமரிசையாக நடக்கும். 20 நாட்களுக்கும் மேலாக நடக்கும் திருவிழாவுக்கு, அந்தியூர், தவிட்டுப்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், புதுப்பாளையம், மலைக்கருப்புச்சாமி கோவில், அத்தாணி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். தவிர, ஈரோடு, கோபி, பவானி, அம்மாபேட்டை பகுதியில் இருந்தும் இவ்விழாவுக்காக அதிக பக்தர்கள் வந்து செல்வார்கள். திருவிழா தவிர, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை போன்ற நாட்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக "ஷெட் அமைக்கப்படவில்லை. கோவிலுக்கு உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் நிழலுக்கு ஒதுங்க வசதி இல்லை. கோவிலின் உள், வெளி வளாகத்தில் காலி இடங்கள் அதிகம் இருந்தும், நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க முடியாமலும், கூடுதல் நேரம் இருக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, வாட்டி எடுக்கும் வெயிலுக்கு பயந்து பக்தர்கள் வருகை குறைகிறது. அறநிலையத்துறை மூலம் அல்லது ஸ்பான்சர்கள் மூலம் ஷெட் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். இதுபற்றி கோவில் ஊழியர்கள் கூறியதாவது: பக்தர்கள் வெயிலுக்கு ஒதுங்குவதற்காக, கோவில் வெளிப்புறம், கோவிலின் உள்புறத்திலும் நிழலுக்கு "ஷெட் அமைக்க முடியாது. கோவில் சுற்று வட்டார பிரகாரத்தில் மட்டும் குறுகிய அளவிலான "ஷெட் அமைக்கும் பணி நடக்கிறது. அறநிலையத்துறை அனுமதியுடன், பெரிய அளவில் நிதி வழங்கினால் மட்டுமே ஷெட் அமைக்க முடியும், என்றனர்.