பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
கும்பகோணம்: மகாமக குளத்தைச் சுற்றி வைகாசி பவுர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி, வரும், 24ம் தேதி நடக்கிறது. கும்பகோணம் மகாமக குளம், 12 ஆண்டுக்கு ஒருமுறை, புண்ணிய நதிகள் தீர்த்தங்களாக சங்கமித்துள்ள குளமாகும். இந்த தீர்த்த குளத்தில் புனித நீராடினாலும், மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் வலம் வந்தாலும், அனைத்து பாவங்கள் விலகி, சாந்தம் மிளிரவும், அமைதி ஒளிரவும், பகைமை அகன்று, சுபிட்ஷம் மலரும் என்பது ஐதீகம். அதன்படி கும்பகோணம் சேக்கிழார் மன்றத்தின் சார்பில், குளத்தை பௌர்ணமி தினத்தில் தீர்த்த வலம் வரும் அனைத்து மக்களும், அமைதியுடனும், இறைவன் அருளுடன் வாழவேண்டும் என்பதற்காக, தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன்படி தமிழ் மாதமான வைகாசி மாத பவுர்ணமி தினமான வரும், 24ம் தேதி, மாலை, 6 மணிக்கு, தீர்த்த வலம் நிகழ்ச்சி நடக்கிறது. தீர்த்த வலம் நிகழ்ச்சியை ரோட்டரி உதவி ஆளுநர் பாலாஜி துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தெய்வசேக்கிழார் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.