பதிவு செய்த நாள்
23
மே
2013
10:05
பழமை வாய்ந்த, மாமல்லபுரம், கடற்கரை கோவில் மீது ஏறி, வன்னியர் சங்க கொடி நட்டவர்களை, கைது செய்யும் நடவடிக்கையை,போலீசார் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களை சேதப்படுத்தினால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற எண்ணம், தலைதூக்கும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறையும், மாமல்லபுரம் போலீசாரும் இணைந்து, இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மாதம், 25ம் தேதி, வன்னியர் சங்கம் சார்பில், "சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. அப்போது, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களில் பலர், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கோவிலின் மீது ஏறி, வன்னியர் சங்கத்தின் கொடியை நட்டனர்.இச்சம்பவம், அகில இந்திய அளவில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, தொல்லியல் ஆர்வலர்கள், இச்சம்பவத்தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். நாட்டில் உள்ள, முக்கிய நினைவுச் சின்னங்களில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், சிறப்பு வாய்ந்ததால், அக்கோவிலுக்கு ஏற்பட்ட சேதம், ஒட்டுமொத்த நினைவுச் சின்னங்களுக்கும் ஏற்பட்ட சேதமாக கருதினர்.
வலுத்தது கோரிக்கை: சேதம் ஏற்படுத்தியவர்களை கண்டுபிடித்து, தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், மாநாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த, பா.ம.க.,வின் துணை பொதுச் செயலர், திருக்கச்சூர் ஆறுமுகம் மீது மட்டும், நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். தற்போது அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், "கடற்கரை கோவில் மீது ஏறி, கொடியை நட்டவர்களையோ, சேதம் விளைவித்தவர்களையோ இன்று வரை, மாமல்லபுரம் போலீசார் கைது செய்யவில்லை. அது மட்டுமின்றி, இப்பிரச்னையை கிடப்பில் போட்டுள்ளதால், நாட்டில் உள்ள, தொல்லியல் ஆர்வலர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும், இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தினால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற, எண்ணம் தலைதூக்கும் அபாயம் உள்ளது என, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள் என்ன ஆனது?: மாமல்லபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, கடற்கரை கோவில் செல்லும் பகுதியில், பல கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுக்க, "ரகசிய கேமராக்கள், உங்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது என, "பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள ஆவணங்களில்,கோவில் மீது ஏறியவர்களின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. இருப்பினும், காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள, கேமராக்களின் உதவியோடு, யார் யார், கோவில் மீது ஏறினர் என, கண்டறிய முடியும். காவல் துறை நினைத்தால், கோவில் மீது யார் ஏறினர் என்பதை, ஒரு வாரத்தில் கண்டறிந்து கைது செய்ய முடியும். ஆனால், சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், தொல்லியல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கைது செய்யாதது வேதனை அளிக்கிறது!: இது குறித்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநாடு நடந்த போது, கடற்கரை கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததையும், அதன் பிறகு என்னென்ன செய்தனர் என்பது குறித்தும், தமிழக அரசுக்கு விரிவாக, அறிக்கை அனுப்பினோம். முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபையில், வன்னியர் சங்கத்தினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது குறித்து, விளக்கி பேசினார்.கடற்கரை கோவில் பிரச்னையில், சேதம் ஏற்படுத்தியவர்கள் மீது, நாங்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. மாமல்லபுரம் போலீசார் மட்டுமே, நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை வட்ட கண்காணிப்பாளர், சென்னையில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்திலும், மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி, மாமல்லபுரம் காவல் நிலையத்திலும், புகார் அளித்தனர்.இருப்பினும், பொத்தாம் பொதுவாகவே, திருக்கச்சூர் ஆறுமுகம் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சேதம் ஏற்படுத்தியவர்கள் மீது, மாமல்லபுரம் போலீசார் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தாலும், மாமல்லபுரம் போலீசாருக்கு, தொல்லியல் துறை சார்பில், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -