பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
திருச்சி: ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின், 46வது ஜீயராக, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், இன்று பட்டமேற்கிறார். ஸ்ரீரங்கத்தில், வடக்குவாசல் தசாவதார சன்னதி அருகே, அஹோபில மடம் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரிய ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், இம்மடத்தின், 44வது பட்டம் ஜீயர், அழகிய சிங்கர் சுவாமிகள் முயற்சியால் கட்டப்பட்டது. அவருக்கு அடுத்ததாக, 45வது ஜீயராக, நாராயண யதீந்திர மகாதேசிகன் என்கிற, அழகிய சிங்கர் சுவாமிகள், 89, பட்டமேற்றார். ஏராளமான வைணவ கோவில்களில், திருப்பணிகளை மேற்கொண்ட ஜீயர், கடந்த சில ஆண்டாக, உடல் நலம் குன்றியிருந்தார். மோசமான உடல்நிலை காரணமாக, ஸ்ரீரங்கம் மடத்துக்கு வந்த ஜீயர், கடந்த, 18ம் தேதி இரவு, 12:25 மணிக்கு ஜீவமுக்தியடைந்தார். அதையடுத்து, இளையபட்டமாக இருந்த, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்கிற, அழகிய சிங்கர் சுவாமிகள், மடத்தில் உள்ள தசாவதார சன்னதியில், 46வது பட்டமேற்கிறார். இன்று காலை, 8:00 மணிக்கு, மட சம்பிரதாயப்படி ,பட்டமேற்றுக் கொள்ளும் புதிய ஜீயருக்கு, மறைந்த ஜீயர் அணிந்திருந்த கணையாழி முறைப்படி அணிவிக்கப்படுகிறது.