பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், நகராட்சி சார்பில், 37 மண்டகப்படி விழா வெகு சிறப்பாக நடந்தது. நகராட்சி ஊழியர்கள் சார்பில் செய்யப்பட்ட பதிமூன்றரை கிலோ எடையுள்ள வெள்ளி சிம்ம வாகனம் கோவிலுக்கு வழங்கப்பட்டது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில், கடந்த 12 ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கியது. கடந்த 17 ம் தேதி பூச்சொரிதலும், 19 ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும், கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை மற்றும் திருவீதி உலா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கரூர் நகராட்சி சார்பில், மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு 37வது மண்டகப்படி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 7.15 மணிக்கு பல்லாக்கு, 10. 30 மணிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க மண்டப்பத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பதிமூன்றரை கிலோ எடை வெள்ளியில் செய்யப்பட்ட சிம்ம வாகனத்தை, கரூர் மாரியம்மன் கோவிலுக்கு நகராட்சி தலைவர் செல்வராஜ், கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துகுமாரிடம் வழங்கினார். அப்போது, நகராட்சி துணைத் தலைவர் காளியப்பன், கமிஷனர் (பொ) கோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஸ்டீபன்பாபு, கோபாலகிருஷ்ணன், முத்துசாமி, கமலா உட்பட பலர் உடனிருந்தனர்.