பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
கந்தர்வக்கோட்டை: பெரம்பூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வீரமாகாளி கோவில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான கிடாக்களை வெட்டி, பலியிட்டு பக்தர்கள் பூஜை செய்து, பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாகாளி கோவில் உள்ளது. இங்கு, இம்மாதம் கிடாவெட்டு பூஜை திருவிழாவை முன்னிட்டு, கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20ம் தேதி இரவு கோவிலில் தங்கினர். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 21ம் தேதி அதிகாலையில், பெரம்பூர் ராஜவீதிகளில் கோவில் தேர் வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. பின்னர், கோவில் பூஜாரிகளுக்கு தாரை, தப்பட்டை முழங்க அருள் அழைக்கப்பெற்று, ஆட்டுக்கிடாக்கள் ஆயிரத்தும் மேல் வெட்டி, பலியிடப்பட்டன. இப்பூஜையில், ஆட்டின் பச்சை ரத்தத்தை பூஜாரி ஆவேசமாக குடித்து அருள் வந்து ஆடினார். இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பல இடங்களில் குழு, குழுவாக பக்தர்கள் குடும்பத்துடன், அசைவ உணவை சமைத்து, படையலிட்டு உறவினர்களுக்கு வழங்கினர். இவ்விழாவையொட்டி கந்தர்வக்கோட்டை, செங்கிப்பட்டி நகரங்களிலிருந்து பெரம்பூர் கிராமத்துக்கு, அரசு போக்குவரத்துக்கழக சிறப்பு பஸ்கள் இரண்டு நாட்கள் இயக்கப்பட்டது. அசம்பாவித சம்பவம் தவிர்க்க கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் உதயசந்திரன், எஸ்.ஐ.,க்கள் அகிலன், கேசவமூர்த்தி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.