பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
திருச்சி: வயலூர் மற்றும் உத்தமர் கோவில்களில் இன்று வைகாசி விசாகத் தேரோட்டம் நடக்கிறது. வயல்கள் சூழ்ந்த இயற்கை சூழலில் அமைந்துள்ள, வயலூர் பிரசித்திப்பெற்ற முருகன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி விசாகத் தேர் திருவிழா சிறப்பானது. நடப்பாண்டு கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத்திருவிழா துவங்கியது. தினமும் இரவு, 8 மணிக்கு, வள்ளி, தேவசேனா சமேச சுப்ரமணிய ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். நேற்று அதவத்தூர் தைப்பூச மண்டபம் சென்றடைந்த சிங்கார வேலவர், குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து, கோவிலை வந்தடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று மதியம், 3.30 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. முன்னதாக, காலை, 10.30 மணி முதல், 11.30 மணிக்குள், கடக லக்னத்தில், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய ஸ்வாமி தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து நாளை காலை, 8 மணிக்கு, நடராஜர் தரிசனம், 10.30 மணிக்கு, விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரி, 12 மணிக்கு, பால்காவடிகள் ஊர்வலம், அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார ஸ்வாமி, வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சியளிக்கிறார். வரும், 26ம் தேதியோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, உதவி கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். உத்தமர்கோவில்: சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகள் எழுந்தருளும் சிறப்புக்குரிய ஸ்தலம் திருச்சி உத்தமர்கோவில். வைகாசி விசாகத் தேரோட்ட திருவிழா கொடியேற்றம் கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தினமும் காலை, மாலை இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் ஸ்வாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை, 9.30 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கடக லக்னத்தில் தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.