பதிவு செய்த நாள்
23
மே
2013
11:05
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த மெலட்டூரில் பாகவதமேளா நாட்டிய, நாடக விழா நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு மெலட்டூர் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேள நாட்டிய நாடக சங்கத்தின் 73வது ஆண்டு நாடக மஹோத்ஸவம் இன்று துவங்குகிறது. இவ்விழா, வரும் 31ம் தேதி வரை நடத்தப்படும். மெலட்டூர் பிரம்ம வெங்கட்ராம சாஸ்திரி என்பவரால், ஆந்திர மொழியில் பாகவதமேள சம்பிரதாய நாட்டிய நாடகம், நாட்டிய வேத இலக்கணப்படி இயற்றப்பட்டது. இதை பல நூற்றாண்டாக, பக்தி பூர்வமாக மெலட்டூர் கிராமத்தினர் நடத்தி வருகின்றனர். மறைந்து அழியும் நிலையில், பாகவதமேளா நாட்டிய, நாடக்கலை இருந்து வந்தது. இந்நிலையில், இதை தற்போது புதுப்பித்து, புத்துயிரூட்டும் வகையில் தொடர்ந்து, பரம்பரை, பரம்பரையாக நிகழ்ச்சியை தற்போதும் நடத்தி வருகின்றனர். இவ்விழாவில் திருக்கருகாவூர் சகோதாரர்கள் ரமணன், சரவணன் குழுவினர் மங்கள இசை நாதஸ்வரம், பாகவத மேள நாடகம், பிரஹலாத சரித்திர நாடகம், பரதநாட்டியம், பாகவதமேளா, ஹரிச்சந்திரா முதல் பாகம் உள்ளிட்டவை நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, ஹரிச்சந்திரா இரண்டாம் பாகம், கிருத்திகா ஜெயக்குமார் பரதநாட்டியம், ஸ்வர்ணாவின் மோகினி ஆட்டம், கீரன்மயி பரதநாட்டியம், மார்க்கண்டேய சரிதம், ருக்குமணி கல்யாணம், தமிழிசை நாடகம், வள்ளித்திருமணம் ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முடிவில், 31ம் தேதியன்று, ஆஞ்சநேய ஆராதனை, நாம ஸங்கீர்த்தனம், கும்பகோணம் ஸ்ரீஅனந்தநாராயணன பாகவதர் குழுவினரின் பாகவத மேளா, லட்சுமி நரசிம்மர் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றது.