பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
தியாகதுருகம்: கோயில் தேர் திருவிழாவில், 61 அடி உயர தேரை, பக்தர்கள் தோளில் சுமந்து, ஊர்வலமாக சென்றனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம், முடியனூர், திரவுபதியம்மன் கோயிலில், வைகாசி மாதம் தூக்குத்தேர் திருவிழா, கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த, 17ம் தேதி, காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம், உற்சவர் அம்மன் சிலை அலங்கரித்து திருவீதியுலா நடந்தது. நேற்று 7 ம் நாள் திருவிழாவில், அலங்கரித்த 61 அடி உயர தேரில், திரவுபதி, அர்ஜூனன் சிலைகள் வைத்து, பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். கோயில்களில், தேரில் சக்கரம் அமைத்து, வடம் பிடித்து இழுத்துச் செல்வதுதான், தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. இதற்கு மாறாக, முடியனூர், திரவுபதியம்மன் கோயிலில், 61 அடி உயரத் தேரை, அலங்கரித்து, பக்தர்கள் தோளில் சுமந்து, ஊர்வலமாக வந்தனர். இன்று காலை, அரவான் களபலியும், அர்ஜூனன் கோட்டை இடிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. பின், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, குழந்தைகளை ஊஞ்சலில் தாலாட்டும் உற்சவம் ஆகியவை நடக்கின்றன.