பதிவு செய்த நாள்
24
மே
2013
11:05
தேனி: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஸ்ரீநிவாசா- பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம், நாளை நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீ மூகாம்பிகா கல்வி அறக்கட்டளை, தேனி கம்மவார் கல்வி நிறுவனங்கள் இணைந்து, ஸ்ரீவாரி ஸ்ரீநிவாசா- பத்மாவதி தயார் திருக்கல்யாண உற்சவத்தை, தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை நடத்துகின்றனர். இதற்காக திருமலையில் இருந்து, இன்று மாலை 6 மணிக்கு தேனி வரும் ஸ்ரீநிவாச பெருமாள், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வி.எல்.கே., திருமண மண்டபத்தில் இரவு தங்குகிறார். நாளை காலை 6 மணிக்கு, மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 10 மணிக்கு, திருப்பதி தேவஸ்தான கமிட்டியினர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை செலுத்துகின்றனர். பகல் 2 மணிக்கு, மண்டபத்தில் இருந்து பெருமாள் ஊர்வலமாக கொடுவிலார்பட்டி திருமண மண்டப வளாகத்திற்கு புறப்படுகிறார்.ஊர்வலத்தில் யானை, ஒட்டகம், குதிரை, செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், விஷ்ணு பாராயணம், பஜன் நடக்கிறது. மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, 2 மணி நேரம் ஊர்வலம் சென்று மாலை 4 மணிக்கு கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரி மைதானத்தை அடைகிறார். அங்கு,மாலை 6 மணி வரை திருமண அலங்காரம் நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை இத்திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு, லட்டு பிரசாதம், சுப்பிரபாத புத்தகம், கோவிந்தா நாமாவளி புத்தகம், பெருமாள் தாயார் படங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை, திருக்கல்யாண உற்சவ கமிட்டி தலைவர் ஆ.ஜே.குணாளன், செயலாளர் வீரராகவன், கம்மவார் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, பொறியியல் கல்லூரி செயலாளர் பொன்னுச்சாமி, கலை, அறிவியல் கல்லூரி தலைவர் தாமோதரன், நிர்வாகிகள் நம்பெருமாள்சாமி, கண்ணன் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பங்கேற்கவும், கூடுதல் தகவல்கள் பெறவும், 94431-36798, 98412-18159 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.