மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் வைகாச தேரோட்ட திருவிழா நடந்தது. திருமங்கையாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்டதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதும், திருக்கரம்பனூர், பிச்சாண்டாகோவில் என பிரசித்தி பெற்றதும், மும்மூர்த்திகளும் முப்பெருந்தேவியர்களுடன் எழுந்தருளியுள்ள திருத்தலம் இந்தியாவிலேயே உத்தமர்கோவில் ஒன்றே ஆகும். இக்கோவிலில் உள்ள பிச்சாடனேஸ்வரருக்கு (சிவச்ன்) வைகாசி விசாக நட்சத்திரத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா மே 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் இரவு பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் பக்தர்களால் தேர்வடம் பிடிக்கப்பட்டு தேர் கோவிலைச்சுற்றி வந்து 10.50 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன், காசாளர் சாய் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.