குழம்பா வச்சிருக்கே! சாதம் வேகவே இல்லே! காய்கறியில் உப்பில்லே, என்று மனைவியிடம் வரிந்து கட்டும் கணவன்மார் படிக்க வேண்டிய விஷயம் இது. தைத்ரிய உபநிஷதம் என்ற நூலில் உண்ணும் உணவைப் பழிக்காமல் இருப்பது விரதத்துக்கு சமமானது என்று சொல்லப் பட்டுள்ளது. பிருகு மகரிஷிக்கு, அவருடைய தந்தை இதுபற்றி சொல்லியுள்ளார். சாப்பாடு சகிக்கவில்லை என்று யாரும் இகழக்கூடாது. இந்த உணவு எனக்கு நன்மை தரும். ஆரோக்கியம் தரும். மனத்தூய்மை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு, மகிழ்ச்சியாக உண்ண வேண்டும், என்று அவர் கூறுகிறார். உணவே கடவுள் என்றும் அந்த ரிஷி சிறப்பிக்கிறார். இதனையே அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று குறிப்பிடுவர். கிராமங்களிலும் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதசுவாமி என்று சுலவடை சொல்வர். அன்ன லட்சுமி, அன்னத்தாய் என்று உணவை தெய்வாம்சமாக வணங்குவர். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழியும் உண்டு. அதாவது, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும் சிவனைத் தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.