ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் கோடிய குடியிருப்பில் உள்ள சிவந்திஅம்மன் கோவிலில் கிடாவெட்டு பூஜை நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கிடா வெட்டு பூஜை நடத்துவது வழக்கம். இந்தாண்டு பஞ்., தலைவர் பாண்டியன் சார்பில், நான்கு ஆட்டுக் கிடாக்களும் லண்டன் பிரமுகர் ராஜேந்திரன் சார்பில், நான்கு கிடாக்களும் குடியிருப்பு சார்பில் ஆறு கிடாக்களும் என 14 ஆட்டுக்கிடாக்கள் பூஜை செய்யப்பட்டு வெட்டி படையலிட்டனர். கோடிய குடியிருப்பு மட்டுமல்லாது ஊர் உறவினர் மற்றும் இக்குடியிருப்பில் பிறந்து வெளியூர்களுக்குத் திருமணம் செய்விக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமான பக்தர்களும் இந்த கிடாவெட்டு பூஜை மற்றும் விருந்தில் கலந்து கொண்டனர். இவ்வாறு கிடா வெட்டி பூஜை செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. பூஜை நடந்து சிறிது நேரத்தில் கொத்தமங்கலத்தில் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.