பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
பழநி: பழநி கோயில் ரோப்கார் மேல்தளத்தின் பழுது குறித்து, கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் குழு, உடைந்த கியர் ஷாப்ட் பாகத்தை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 5ல் பழநி ரோப்கார் மேல்தள சக்கரத்தின் உள்ளே "கியர் ஷாப்ட் பழுது காரணமாக 250 அடி உயரத்தில் 8 பெட்டிகள் தொங்கின. 24 பக்தர்கள், டோலி மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். பழுதாகியுள்ள "கியர் ஷாப்ட் கழற்றும் பணியில், கோல்கட்டா ரோப்வே ரிசர்ச் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொங்கும் பெட்டிகள் கீழே விழாமல் இருப்பதற்காக, இரும்புவடக்கயிற்றில் "சேப்டி லாக்கள் பொறுத்தப்பட்டு, சக்கரத்தின் உதிரி பாகங்களை கழற்றும் பணி நடந்து வருகிறது. ரோப்கார் பெட்டிகள் அந்தரத்தில் இன்னமும் தொங்கிகொண்டுள்ளன. பேராசிரியர் குழு ஆய்வு: சேதமடைந்த கியர் ஷாப்ட் வெல்டிங் செய்து, ரோப்காரை இயங்கச்செய்து, ஒவ்வொரு அடியாக பெட்டிகளை நகர்த்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஷாப்ட் மிகவும் சேதமடைந்துள்ளதால், இயங்கிய சில நிமிடங்களில் மீண்டும் "கட் ஆகிறது. இதனை ஆய்வு செய்ய கோல்கட்டா நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்ட, கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மெட்டாலஜி, மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் பாலுசாமி, கிரிராஜ், கோபாலகிருஷ்ணன் பழநி வந்தனர். பழுதான ஷாப்ட் பாகத்தின் அமைப்பு முறை மற்றும், ரோப்கார் இயங்கும் விதம், தொழில் நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.
அக்குழுவினர் கூறுகையில், ""ரோப்காரில் பழுதான ஷாப்ட் பாகங்களை ஆய்வு செய்ய உள்ளோம். எந்தவகையான மெக்கானிசம் உள்ளது. திடீரென பழுதாக காரணம் என்ன என ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின் எங்களது அறிக்கை கோல்கட்டா நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்படும், என்றனர். ரோப்கார் விபத்து குறித்து, கோல்கட்டா நிறுவனம், ஆய்வுபணியை நடத்தி வரும் நிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில் எவ்வித பணியும் இதுவரை துவங்கவில்லை.