பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, வேலாயுத தீர்த்த குளம், குப்பை மற்றும் முட்செடிகளால் சீரழிந்து வருகின்றன.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலை, பாரம்பரிய பாங்குடன் உருவாக்கிய சிதம்பர சுவாமிகள், கண்ணகப்பட்டில் பூஜை செய்ய, வீர சைவ மடம் ஒன்றை நிறுவினார். இதன் அருகே, ஒரு ஏக்கர் பரப்பில், வேலாயுத தீர்த்த குளம் உள்ளது. கருங்கற்களால் படித்துறையுடன் அமைக்கப்பட்ட இக்குளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், குளத்தின் கிழக்கு புறத்தில், படித்துறை ஆங்காங்கே சரிந்து காணப்படுகிறது. முட்செடி மற்றும் குப்பை மிகுந்து உள்ளது. தற்போது, திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகின்றன. மடத்தின் திருப்பணிகளும், 50லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இந்நிலையில், பாரம்பரிய சிறப்பு கொண்ட இக்குளத்தையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""குளத்தில் உள்ள முட்செடிகளை உடனடியாக அகற்றவும், உபயதாரர்கள் மூலம் குளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.