பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
ஊத்துக்கோட்டை: வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், 38ம் ஆண்டு தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.பென்னலூர்பேட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில், வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த, 3ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தினமும், மூலவர் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணி முதல், 11:00 மணி சகஸ்ரநாம பாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை அரிகதாகானம் நிகழ்ச்சியும் நடந்தது. வெலமகண்டிகை, ராமலிங்காபுரம், பெரிஞ்சேரி, ராமகுப்பம், போந்தவாக்கம், அனுமந்தாபுரம், புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பஜனைக் குழுக்கள் இதில் கலந்து கொண்டன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீ மிதித்தனர்.அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடந்தது.