பதிவு செய்த நாள்
12
ஜூன்
2013
10:06
ஸ்ரீவில்லிபுத்தூர்;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், கூடுதல் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.இதனால் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. இங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., தலைமையில் ஏழு போலீசார்,பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். தற்போது ஆண்டாள் கோயில் வாசலில் மட்டும், வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் உள்ளது. இதன் மூலம் பக்தர்களை பரிசோதனை செய்து, கோயிலுக்குள் அனுமதித்து வருகின்றனர். ஆனால், வடபத்ரசாயி கோயில், ராஜகோபுரம் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் இல்லை. இதனால், அப்பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதையடுத்து, பல லட்ச ரூபாய் செலவில், ஆடிப்பூர மண்டபத்திலிருந்து வடபத்ரசாயி கோயில் செல்லும் பாதையில், மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி நடந்து வருகிறது. ஆடிப்பூர தேரோட்டத்திற்கு முன்பாகவே, இந்த நுழைவ வாயில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. மேலும்,ராஜகோபுரம் பகுதியில் கூடுதல் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கவும்,கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் போலீஸ்துறையினர், , வெடிகுண்டு மோப்ப நாய் போன்றவைகளை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுத்தால் ,மிரட்டல்கள் வரும்போது, மோப்ப நாய் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.