பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
சென்னை: கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்கான சிறப்பு பூஜைகள் இன்று முதல்
துவங்குகின்றன. பாரிமுனை ராசப்ப செட்டி தெருவில் புகழ்பெற்று விளங்கும் கந்த கோட்டம் என்றழைக்கப்படும் முத்துகுமாரசாமி கோவில், 1673ம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. இங்கு, வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜ கோபுரம், மூலவர் மற்றும் மற்ற உற்சவர் விமானங்கள் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் இன்று முதல் துவங்குகின்றன. யாகசாலையில் மொத்தம் 42 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை விக்னேஸ்வர, கோ பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் 12ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. வரும் 15ம் தேதி ஆறாம் கால பூஜை முடிவில் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம்
நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மாலையில் தேவசேனை திருக்கல்யாணமும், தங்கம் மற்றும் வெள்ளி ரதங்களுடன் சிம்மம், யானை, நாகம், மயில், சூரபத்மன், குதிரை, தங்க தொட்டி, தொட்டி ஆகிய 10 வாகனங்களின் புறப்பாடும் ஒரே நேரத்தில் நடக்கிறது. பின் 16ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.