பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
11:07
சிவகிரி:சிவகிரி இலக்கனேஷ்வரர் காந்தேஸ்வரி அம்பாள் கோயிலில் நாளை (14ம் தேதி) ஆடி மாத பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 8 மணிக்கு அம்மன் சப்பர வீதியுலாவும், வரும் 18ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் விசாக நட்சத்திரத்தில் இலக்கனேஸ்வரர் காந்தேஸ்வரி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம், 10 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுவாமி, அம்பாள் வீதியுலா இரவு வில்லிசை ஆகியவையும், வரும் 22ம் தேதி உத்திராட நட்சத்திரத்தில் பூ வளர்த்தல், தீர்த்த அழைப்பு, பால்குடம் அழைத்தல், அபிஷேகம், மகா தீபாராதனை, செண்டா மேளம், நையாண்டி மேளம், வாடிப்பட்டிமேளம், பேண்டு வாத்தியம், பஞ்ச வாத்தியம் முழங்கிடயானை அம்பாரி, முளைப்பாரி, அக்னிசட்டி, அழகுரதம், கவுருகுத்து, அக்னி காவடி, பூ இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் அம்பாளுக்கு தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு திருவோண நட்சத்திரத்தில் மகா தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.