பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு, 556 குடம் பாலபிஷேக பெரு விழா நேற்று நடந்தது. சென்னிமலையில் முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் ஸ்ரீசுப்பிரமணியராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குதான் முருகப்பெருமான் திருபுகழை தந்த அருணகிரி நாதருக்கு படிக்காசு நல்கியது. புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு திருகோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படிகள் வழியாக இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்புகள் கொண்ட ஸ்தலமாகும். சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு ஆண்டு தோறும், ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாலபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது. நேற்று, 46வது ஆண்டாக, 556 குடம் பாலபிஷேக விழா நடந்தது. காலை, 7.35 மணிக்கு, 556 திருப்பாற் குடங்கள், உரிய சிறப்புடன் சென்னிமலை நகரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேளா தாளத்துடன் திருவீதி வலம் வந்து, மலைக்கோவிலை அடைந்தது. காலை, 11.40 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பாலபிஷேகம் துவங்கி, மதியம், 1.30 வரை நடந்தது. 2 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்து, 2.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. மதியம் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. பாலபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்க மேலாளர் காளிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.