பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டி மூங்கில்கொத்து முனியப்பன் கோவில் பண்டிகை, எருது பூஜையுடன் அமைதியாக நடந்து முடிந்தது. சேலம், கொண்டலாம்பட்டி அருகில் உள்ள நெய்க்காரப்பட்டியில் மூங்கில்கொத்து முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆடிமாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையில் பண்டிகையும், எருதாட்டமும் நடைபெறும். இங்கு நடைபெறும் எருதாட்டத்துக்காக, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, இப்பகுதி சுற்றுப்புற கிராம மக்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று, எருதுகளை அழைத்து வருவதும் வழக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டு நடத்தப்படும், இந்த எருதாட்டத்துக்கு கடந்த ஆண்டு, வருவாய்துறையினர் தடை விதித்தனர். கடைசி நேரத்தில் அறிவித்த தடையால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வன்முறையில் இறங்கினர். இதனால் பெரும் பதட்டம் நிலவியது. இந்நிலையில், நடப்பாண்டு எருதாட்டத்துக்கு அனுமதி வழங்கும்படி, கடந்த மாதமே கலெக்டர் மகரபூஷணத்துக்கு மனு அளித்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்றம் மூலம் அனுமதி கோரப்பட்டது. இதற்கிடையில், கிராம பிரதிநிதிகளை அழைத்து, போலீஸார் அமைதிப்பேச்சுவார்த்தையும் நடத்தினர். இந்நிலையில் நீதிமன்றம், ஒரு எருதை வைத்து, எருது பூஜை நடத்தி, பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள இடங்கணசாலை கிராமத்தில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி, எருது பூஜைக்கான எருதை தேர்வு செய்து அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை கருத்தில் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழாக்குழு தலைவர் ஏழுமலை தலைமையிலான கிராம மக்கள், எருது பூஜை நடத்தி, கோவிலை சுற்றி அழைத்து வந்தனர். கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, ஏராளமானோர் பண்டிகையில் பங்கேற்றனர்.