பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம், கடந்த 11ம் தேதி சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலின்பேரில், அலகு போட்டுக்கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், வேண்டுதலின்பேரில், பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு, கார், டிராக்டர், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றனர். பறவைக்காவடி ஊர்வலமும் நடந்தது. செடல் திருவிழாவில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பழனிச்சாமி, ஆதிமுலம் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். செடல் திருவிழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு வரை, கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.