சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்று (22ம் தேதி) ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான "சங்கரரும், நாராயணரும் ஓன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் தபசுக்காட்சி நடக்கிறது.தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள் சமேதரராக அருள் பாலித்து வருகிறார். முன்னொரு காலத்தில் சைவ மற்றும் வைணவ மக்களிடையே சிவன், விஷ்ணு ஆகிய இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரு தரப்பைச் சேர்ந்த பக்தர்களிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. பக்தர்களிடையே ஏற்பட்ட பிரிவினையைக் கண்ட அன்னை கோமதி மனம் வருந்தி சிவன், விஷ்ணு இருவரும் ஒன்று என்று பக்தர்கள் அறியும் வண்ணம் விளக்க சுவாமியிடம் வேண்டினார். அப்போது புன்னை வனத்தில் தபசு இருந்தால் இருவரும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்குவதாக சுவாமி கூறினார். இதனால் அன்னை கோமதி புன்னை வனக்காட்டில் ஒற்றைக்காலில் "தபசு இருந்தார். இதனைத் தொடர்ந்து சங்கரலிங்கசுவாமி தனது உடலின் ஒரு பகுதியை சங்கரராகவும், மற்றொரு பகுதியை நாராயணராகவும் மாற்றி "சங்கரநாராயணசுவாமியாக காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியே ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் "ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சங்கரநாராயணசுவாமி கோயிலில் சங்கரநாராயணருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சங்கரன்கோவிலில் மட்டும் தான் சங்கரநாராயணசுவாமி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக்காட்சி ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராட நட்சத்திர நாளில் நடக்கும்.இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 7ம் திருநாளான 18ம் தேதி இரவு அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருநாளான 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் 11ம் திருநாளான இன்று (22ம் தேதி) முக்கிய நிகழ்ச்சியான "தபசுக்காட்சி நடக்கிறது. இன்று காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திரமவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும் கும்பம் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை 11.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் சங்கரலிங்கசுவாமி தெற்கு ரதவீதியில் ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் சங்கரநாராயணசுவாமி யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் பொன்சாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.