பதிவு செய்த நாள்
22
ஜூலை
2013
10:07
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில், பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ள, 3 ஏக்கர் 60 சென்ட் நிலம் முழுவதும் சுற்றுச்சுவர் கட்டவும், கோயில் நிலத்தில் உள்ள தளம் முழுவதும் சிமென்ட் சிலாப் பதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்குவதற்கு மண்டபம் கட்டவும், குளியலறை, உடைமாற்றும் அறை, ஓய்வு அறை கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.30 லட்சத்தில் முடிகாணிக்கை மண்டபம், குளியல் அறை, உடைமாற்றும் அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் ரோட்டிற்கு மேற்கு பகுதியில் உள்ள பெரியாற்றில், புதிய படித்துறை கட்டித்தருமாறு கோயில் நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் படித்துறை கட்ட பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் சம்மதித்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த நிலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க வசதியாக, தங்கும் விடுதி கட்டி, அதனை கோயில் நிர்வாகமே பராமரிக்க வேண்டும், எனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.