பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.கடந்த 14ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில், தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம், கடந்த 20ல் தாயார் சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர, முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார்.மாலை 5.35 மணியளவில் பக்தர்கள், கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தாசில்தார் ரசிக்கலா, துணைத்தாசில்தார் ராஜகோபால், பேரூராட்சி தலைவர் பாப்பாத்தி, தணைத்தலைவர் பாலசுப்பிரமணி, செயல் அலுவலர் விஜயநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.