பதிவு செய்த நாள்
03
ஆக
2013
10:08
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை மதுர காளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 308 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. ஆத்தூர் கோட்டை, சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆக 2, ஆடி வெள்ளியை முன்னிட்டு, தீபலட்சுமி திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 10 மணியளவில், வலம்புரி விநாயகர், பாலசுப்ரமணியருக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. 11 மணியளவில், மதுரகாளியம்மன் ஸ்வாமிக்கு, பால், பழம், மஞ்சள், தயிர், குங்குமம் அபிஷேகம் நடந்தது. பகல், 12 மணியளவில், மதுரகாளியம்மன் ஸ்வாமி, வெள்ளி கவசம், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12.15 மணியளவில், 308 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது.ஆத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி வைத்து, வழிபாடு செய்தனர்.
*அதேபோல், ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 108 பால் குட ஊர்வலம் நடந்தது. அப்போது, பால் குடம் எடுத்து வந்த பெண்கள், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில், ஆத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.