பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
சிறுவாபுரி :திருமண தடைகளை போக்கவல்ல, வள்ளிமணவாள பெருமானுக்கு கல்யாண மகோற்சவம் வரும், 11ம் தேதி, சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடக்க உள்ளது. அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின், நான்காம் ஆண்டு விழாவையொட்டி இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை - கோல்கட்டா நெடுஞ் சாலையில், சென்னையில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ளது சின்னம்பேடு கிராமம். இங்கு, சிறுவாபுரி சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பெற்ற தலமான இங்கு, மணக் கோலத்தில் காட்சியளிக்கும் வள்ளிமணவாள பெருமானை வணங்கினால், திருமணம் கைகூடு வதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் வருகின்றனர். திருமண பிரார்த்தனை நிறைவேற, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து, ஆறு வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் வரவேண்டும். ஆறு வாரமும் வரமுடியாத பக்தர்களுக்காக, வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மகோற்சவம் நடத்தி, திருமண தடைகளை போக்கும் மணமாலை அணியும் வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. இதில், மணமாகாத ஆண், பெண்கள் , மாலை கொண்டு வந்து சுவாமிக்கு அணிவித்து, அதை பிரசாதமாக பெற்று, அணிந்து, சுவாமியை வலம் வர வேண்டும். இந்த பிரார்த்தனையில் பங்கேற்போருக்கு, அடுத்த கல்யாண மகோற்சவத்திற்குள் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. வரும், 11ம் தேதி அண்ணா மலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின், நான்காம் ஆண்டு விழாவையொட்டி வள்ளி கல்யாண மகோற்சவம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடக்கின்றன. 7:30 மணிக்கு, திருவல்லிக்கேணி சவுந்தர்ய ரத்னமாலா குழுவினரின், முருகன் பாமாலை இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு, ‘அண்ணாமலையார்’ என்ற பெயரில் இணையதளத்தை, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர், இளம்பிறை மணிமாறன் துவக்கி வைக்கிறார். 9:00 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகமும், தொடர்ந்து கல்யாணமும், பின் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. விவரங்களுக்கு 97909 57592, 99406 25308 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.