உளுந்தூர்பேட்டை : பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் உள்ள அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் அமாவாசைதோறும் பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்து வருகிறது. ஆடி அமாவாசையான நேற்று காலை 10:30 மணிக்கு யாகம் துவங்கி சங்கல்பம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 11:45 மணிக்கு யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் யாக குண் டத்தில் ஊற்றப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி, வெற்றிலையில் எழுதி கொடுத்தனர். அதனை யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொட்டினர். கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர். அமாவாசையையொட்டி பிரத்தியங்காதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.