பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
புளியங்குடி:சிந்தாமணி முப்புடாதி அம்மன் கோயில் 23வது ஆண்டு பூக்குழி திருவிழா நடந்தது. புளியங்குடி அடுத்த சிந்தாமணியில் உள்ள முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. அன்று அதிகாலையில் 4 மணிக்கு கணபதி ஹோமம், கும்பாபிஷேகம் தெடர்ந்து காலை 6 மணிக்கு கால்நாட்டு விழா, காப்பு கட்டும் விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார், தொடர்ந்து 29ம் தேதி யாதவர் சமுதாயம் சார்பில் தீர்த்தகுடம், அபிஷேகம் இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, 30ம் தேதி வனிகவைசியர் சமுதாயத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம் இரவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது, தொடர்ந்து 31ம் தேதி தேவர் சமுதாயத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம், இரவில் அலங்காரம், சிறப்பு பூஜை, 1ம் தேதி சேனைத்தலைவர் சமுதாயத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம், இரவு சிறப்பு பூஜை அலங்கார பூஜை, தொடர்ந்து இரவில் நாடக நிகழ்ச்சிகளும் நடந்தது. 2ம் தேதி ராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம், இரவில் சிறப்பு பூஜை, நடந்தது. தொடர்ந்து ஒயிலாட்டம், கும்மிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 3ம் தேதி விஸ்வகர்ம சமுதாயத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம், இரவு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தன. 4ம் தேதி மின்னல்வேந்தர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம், இரவில் அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கும்மிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. 5ம் தேதி தெலுங்கு யாதவர் சமுதாயத்தின் சார்பில் தீர்த்தகுடம் அபிஷேகம், இரவு சிறப்பு பூஜை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு புதிய உதயம் நண்பர்கள் குழுவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அதனையடுத்து கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய திருவிழாவான பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக சுவாமிக்கு கணபதி ஹோமம், பால்குடம், தீர்த்தகுடம், கும்பாபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாகன வீதி உலா நடந்தது. முன்னதாக கோயில் முன் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. மாலையில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி கோஷம் முழங்க பூ இறங்கினர். தொடர்ந்து இரவு படைப்பு தீபாராதனை நடந்தது. இன்று (7ம் தேதி) காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தலும், மதியம் சப்பரத்தில் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு முளைப்பாரி எடுத்தல், நாளை (8ம் தேதி) காலையில் புஸ்பாஞ்சலி, மாலையில் அன்னதானம் நடைபெறுகிறது. பூக்குழி திருநாளை முன்னிட்டு புளியங்குடி டி.எஸ்.பி., வானுமாமலையின் ஆலோசனையின் பேரில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.