நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2013 10:08
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவை ஒட்டி நாகருக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகரை மூலவராக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜாகோவில். இந்த பெயரில்தான் நாகர்கோவில் ஊர் பெயரும் அமைந்துள்ளது. கோயில் பெரிதாக இருந்தாலும் நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலைக் கூரையில்தான் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து வரும் மண்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு நாகராஜா பிரதிஷ்டையுடன், அனந்தகிருஷ்ணனுக்கும் பிரதிஷ்டை உள்ளது. சாஸ்தா, தேவி, சிவன் சன்னதிகளும் இங்கு உள்ளது. இப்படி சிறப்பு பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். இந்த நாளில் நாகருக்கு பால் அபிஷேகம் நடத்தினால் ராகு-கேது தோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் குறிப்பாக பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆண்டு முதல் ஆவணி ஞாயிறு தினமான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று நாகருக்கு பாலபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்காக அன்னதானம், குளிர்பானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருந்தது.