பதிவு செய்த நாள்
21
ஆக
2013
10:08
சென்னை: சென்னையில், கர்நாடக இசைக் கலைஞர், செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், நாடு முழுவதும் உள்ள, கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாசின், திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசைப் பள்ளி, இவ்விழாவை நடத்துகிறது.
செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், இம்மாதம், 30, 31, செப்டம்பர், 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாசின், திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசைப் பள்ளி, இவ்விழாவை நடத்துகிறது. இதில், கர்நாடக இசையின், பிரபல கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். செம்பை வைத்தியநாத பாகவதரின் பிரதான சீடர்களும் பங்கேற்க உள்ளனர். 80 வயதை தாண்டிய, கர்நாடக இசை உலகின் மூத்த பிரபல, கலைஞர்கள் விழாவில், கவுரவிக்கப்பட உள்ளனர். இம்மாதம், 30ம் தேதி நடக்கும் விழாவில், குரல் பிரிவில், கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன்; வயலின் - அனந்தராமன்; மிருதங்கம் - மெட்ராஸ் கண்ணன்; தம்புரா - லட்சுமி நாராயணன்; நாதஸ்வரம் - ராஜண்ணா, தவில் - பொறையாறு வேணு பிள்ளை ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. இம்மாதம், 31ம் தேதி நடக்கும் விழாவில், குரல் பிரிவில், பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீகாந்தன், தஞ்சாவூர் சங்கர ஐயர்; மிருதங்கம் - டி.கே. மூர்த்தி; நாதஸ்வரம் - அச்சல்புரம் சின்னத்தம்பி; தவில் - ராமலிங்கம், தம்புரா - வெங்கட்ராமன்; ஆர்மோனியம் - பல்லடம் வெங்கட்ராமன ராவ், ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. செப்டம்பர், 1ம் தேதி, குரல் பிரிவில், மணக்கல் ரங்கராஜன், திருப்பூத்திருத்தி வெங்கடேசன், சுப்ரமணியன்; வயலின் - கிருஷ்ணன்; மிருதங்கம் - காரைக்குடி சந்திரமவுலி; நாதஸ்வரம் - நடராஜன்; தவில் - பாலு; ஜலதரங்கம் - அனயம்பட்டி கணேசன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும், கோபால கிருஷ்ணன், ஜெய விஜயன், நெடனூரி கிருஷ்ணமூர்த்தி, பிரசாலா பொன்னம்மாள் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், ராஜேஷ் வைத்யா, பின்னணி பாடகி மஹதி, கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோரின், இசைக் கச்சேரியும் நடக்கிறது.