பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
விநாயகர் சதுர்த்தி கோலாகலம் துவங்கி விட்டது. நாடு முழுவதும், விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிந்து, விற்பனையும் துவங்கியுள்ளது. அதேநேரம், இயற்கைக்கு இசைந்த முறையில், சிலைகள் தயாரிக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் துறை கோரிக்கை விடுத்துள்ளது. அதை வலியுறுத்தும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெண்ணாங்குபட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயன பொருட்களின்றி, இயற்கை முறையில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத, நீரில் எளிதில் கரைய கூடிய இந்த சிலைகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பழனிவேலு கூறியதாவது: தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக, பெரிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 5 அடி முதல் 12 அடி உயரம் வரை உள்ள பெரிய சிலைகளை செய்து வருகிறோம். எளிதில் தண்ணீரில் கரைய கூடிய பேப்பர் தூள், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவற்றின் மூலம் இந்த சிலைகளை செய்து, ‘வாட்டர் கலர்’ கொடுக்கிறோம். 5 அடி உயரம் உள்ள சிலை, 4,500 முதல் 5,000 ரூபாய் வரையிலும், 12 அடி உயரம் உள்ள சிலைகள், 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கிறோம். ரசாயன பொருட்கள் இன்றி, முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், திருப்பதி, பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரம் போன்ற நகரங்களிலிருந்தும், பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து, சிலைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் விற்பனையாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.