பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
சென்னை: பண்டைய கலாசாரத்தை பறைசாற்றும் கல்வெட்டு தகவல்களை, மக்களிடம் பரப்ப வேண்டும், என, ராமகிருஷ்ணா மடத்தின் யதுனாதனந்தா சுவாமிகள் வேண்டுகோள் விடுத்தார். ரீச் பவுண்டேசன், சென் னை மத்திய ஆதித்யா ரோட்டரி சங்கம் மற்றும் ராமகிருஷ்ணா மடம் ஆகியன இணைந்து, தமிழ் கல்வெட்டு படிப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கல்வெட்டு படிப்பு பயிற்சி துவக்க விழா, சென்னை தின விழா ஆகிய முப்பெரும் விழாவை நடத்தின. சென்னை, தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இவ்விழாவில், தமிழ் கல்வெட்டு படிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, ராமகிருஷ்ணா மடத்தின் யதுனாதனந்தா சுவாமிகள் பேசியதாவது: ஒவ்வொரு நாடும் தனக்கென தனி கொள்கையை வைத்துள்ளது. இங்கிலாந்து உலக வியாபாரத்தில் முதலிடம் பெற செயல்படுகிறது; அரசியலில் கோலோச்ச, அமெரிக்கா விழைகிறது; பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த ஜெர்மனி நினைக்கிறது. ஆனால், இந்தியாவோ, ஆன்மிகத்தை நாட்டின் தத்துவமாகக் கொண்டுள்ளது. அதுவே, நம் நாட்டின் லட்சியமாகும். இந்தியாவில், பல தரப்பட்ட கலாசாரங்கள் இருந்தாலும், அதன் ஒருமுகத் தன்மை ஆன்மிகமே. வாழ்க்கையில், என்ன தொழில் செய்தாலும், எந்த வழியைப் பின்பற்றி சென்றாலும், முடிவில், தெய்வ அருள் கிடைக்க வேண்டும் என்பதே, ஒவ்வொருவரின் இலக்கு. நம் பண்டைய கலாசாரம் பறைசாற்றும் இக்கொள்கைகளை, நம் முன்னோர்கள் ஓலை சுவடி, கல்வெட்டு போன்றவற்றில் எழுதி வைத்துள்ளனர்.பண்டைய கல்வெட்டுகளில் இருக்கும் இத் தகவல்களை அறிபவர்கள், அதை மக்களிடம் பரப்ப வேண்டும். ஒரு செயலை செய்ய முனையும்போது, அதில் ஆழ்ந்த அக்கறையுடன், நிபுணத்துவம் பெற வேண்டும். இவ்வாறு, யதுனாதனந்தா சுவாமிகள் கூறினார். விழாவுக்கு, ரீச் பவுண்டேசன் நிறுவன அறங்காவலர் சத்யமூர்த்தி வரவேற்றார். வரலாற்று ஆய்வாளர் நரசய்யா, சென் னை மத்திய ஆதித்யா ரோட்டரி சங்க தலைவர் தேவராஜ், பண்டைய இந்திய தொல்லியல் மற்றும் அறிவியல் அகடமி நிறுவனர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.