பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
செங்கல்பட்டு: ஆத்தூர் வடபாதி கிராமத்தில் உள்ள, ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 1ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்தூர் கிராமத்தில், பழமை வாய்ந்த சிவத்தலம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சுற்றி, ஆறு சிவலிங்க மேனிகள் கிடைத்தன. அவற்றுள் மூன்றாவது சிவலிங்கம், ஆத்தூர் வடபாதி கிராமத்தில் அமைந்துள்ள, ஆதிசக்தி உடனாய ஆதிலிங்கேஸ்வரர் கோவில். இங்குள்ள ஈசன், உடல் நோய் தீர்ப்பார் என்பது ஐதீகம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், சோழர்கள் காலத்தில் சீரும், சிறப்புடன் விளங்கியது. ஆனால், காலப்போக்கில், போதிய பராமரிப்பின்றி, சிதிலமடைந்தது. இந்நிலையில், பல சிவ யோகிகளாலும், சிவனடியார்களின் பேரருளினாலும் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் காலையில், திருப்பள்ளி எழுச்சி பாடப்பெற்று, மாலையில், தேவார பாடல்களும், இரவில், திருப்பொன்னூசல் பாடியும், அடியார்கள் ஈசனை வழிபட்டு வருகின்றனர்.
தற்போது, ராஜகோபுரம் மற்றும் விமானம் ஆகியவற்றுக்கு வண்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி, குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. முன்னதாக, இம்மாதம் 31ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி, செப்டம்பர் மாதம் 1ம் தேதி, காலை 4:30 மணிக்கு, யாகசாலை பூஜையும், காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு, வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகின்றன. விழாவில், புதுச்சேரி, ஆடவல்லான் தமிழிசை திருக்கூடம் சந்துரு தலைமையில், திருக்கயிலாய வாத்தியமும் நடைபெறுகிறது.