உளுந்தூர்பேட்டை: ஆதனூர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை திருவண்ணாமலையில் ஏலம் விட இருந்ததை கிராம மக்களின் முயற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை தாலுகா ஆதனூரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு 14.75 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு, பூஜைகள் செய்யப்பட்டன. அதே போல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு என 37 செண்ட் நிலம் ஆதனூர் அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ளது. வருவாய் துறையினரின் குளறுபடியால் ஆதனூர் கோவிலுக்கு சொந்தமான இடம், யூடிஆரில் திருவண்ணாலை அருணாசலேஸ்வரர் கோவில் இடத்துக்கு சொந்தமானதாக மாறியது. இதனால் இந்த இடத்தில் நஞ்சையில் 4.52 ஏக்கர் நிலமும், புஞ்சையில் 10.23 ஏக்கர் என 14.75 ஏக்கர் முதன்முறையாக குத்தகை சாகுபடி உரிமைக்கு பொது ஏலம் விடும் முயற்சிகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரஞ்ஜோதி இறங்கினார். குத்தகை காலம் 23.08.2013 முதல் 30.6.2014ம் தேதி வரை ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டு கடந்த 23ம் தேதி திருவண்ணாமலையில் ஏலம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த அதனூர் கிராம மக்கள் கோவில் செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அவர் கண்டு கொள்ளாததால், அதிருப்தியடைந்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஏலம் விட தடை விதித்ததால் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.