மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மாரியம்மன் கோவிலுக்கு அருகில் பாசன வாய்க்காலான பெருவளை வாய்க்கால் இருந்தது. கோவிலின் விரிவாக்கப் பணிக்காக பெருவளை வாய்க்கால் அரை கி.மீ., தூரத்தில் துண்டிக்கப்பட்டு உபயதாரர் உதவியுடன் மாற்று வாய்க்காலை ஏற்படுத்தி வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆனால், முன்பு இருந்த வாய்க்கால் தூர்க்கப்பட்டாததால் மழை நீர், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பகலில் குறைந்த அளவிலும் இரவு நேரங்களில் அதிகமாகவும் பக்தர்களை கடித்து குதறுகின்றன. அமாவாசை மற்றும் முக்கிய விழா நாட்களில் பக்தர்கள் இரவு தங்கி கோவிலை சுற்றிலும் படுத்து உறங்குகின்றனர். கொசுக்கடியில் உறக்கத்தை தொலைப்பதுடன் உடல்நலக்குறைவும் பக்தர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, பெருவளை வாய்க்காலின் துண்டிக்கப்பட்ட உபயோகமற்ற பகுதிகளை கழிவுநீர் தேங்காமல் தூர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.