பதிவு செய்த நாள்
26
ஆக
2013
11:08
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டையில், மழை வேண்டியும், பயிர்கள் செழிக்கவும் முனீஸ்வர ஸ்வாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பக்தர்கள் பங்கேற்றனர். புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையிலுள்ள பாண்டி முனீஸ்வர ஸ்வாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில், 50 கிலோ அரிசியை பொங்கலிட்டும், 50 லிட்டர் பசும்பாலில் 10 வகையான பழங்களை போட்டு, பொங்கலிட்டனர். மேலும், 50 தலைவாழை இலைகளில் முனீஸ்வர ஸ்வாமிக்கு படையல் வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். இதன்மூலம் மழை பெய்யும், பயிர்கள் செழிக்கும் என்பது நம்பிக்கையும், ஐதீகமும் ஆகும். அதனால், சிறப்பு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, படையலிட்ட பொங்கலை பாண்டி முனீஸ்வர ஸ்வாமி கோவிலில் வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தனர். இதற்கான ஏற்பாட்டை கந்தர்வக்கோட்டை பகுதி மக்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.