பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின், பழைய தங்கத் தேருக்கு, தங்க முலாம் பூசும் பணி, நேற்று துவங்கியது. திருப்பதி ஏழுமலையானுக்கு, புதிய தங்கத் தேர் உருவாக்கும் பணி, இன்னும் முடிவடையவில்லை. பிரம்மோற்சவம் நெருங்கி விட்டதால், பழைய தங்கத் தேருக்கு, 25 கோடி ரூபாய் செலவில், தங்க முலாம் பூச முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 30 அடி உயரமுள்ள, பழைய தங்கத் தேரின் மீதுள்ள தகடு அகற்றப்பட்டது. புதிதாக, 2,900 கிலோ, செப்புத் தகடு பொருத்தப்பட்டு, அதன் மீது, 73 கிலோ தங்கத்தில், முலாம் பூசும் பணி, நேற்று, பூஜையுடன் துவங்கியது. இப்பணி, திருமலையில் உள்ள அருங்காட்சியகத்தில், பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கேரளா, பாலக்காடை சேர்ந்த எஸ்.ஏ.டி. மேனனிடம் பணி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் தலைமையில், மதுரை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த, 16 பேர், முலாம் பூசும் பணியில் ஈடுபடுவர். இவர்கள் அனைவரும், 40 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள். இப்பணியை, 25 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.