பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
மும்பை: மும்பையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியுள்ள வேளையில், பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை போலீசார் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் தீவிரப்படுத்தி உள்ளனர். 10 நாட்கள் : விநாயகர் சதுர்த்தி விழா, மும்பையில், அடுத்த மாதம், 9ம் துவங்கி தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கின்றன. இதற்காக, நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகளுக்கு, பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பாளர்களை அழைத்து, மும்பை நகர போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்களிடம், விழாவை நடத்துவதற்கான வழிகாட்டி குறிப்புகளை வழங்கினார். மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 6,000 விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள், பல்வேறு அமைப்புகளின் போன் நம்பர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவற்றை பற்றிய அனைத்து தகவல்களும், வழிகாட்டி குறிப்பில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்து உள்ளன. இதன் காரணமாக, தீவிர கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஒரு வழிச்சாலை: விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இதற்கான விழா, 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மும்பையில், 50 சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. 56 சாலைகள் ஒரு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மும்பை போலீசாருடன், பாதுகாப்பு பணியில் என்.எஸ்.எஸ்., பிரிவைச் சேர்ந்த, 900 தன்னார்வலர்கள், என்.சி.சி., படையைச் சேர்ந்த, 400 மாணவர்கள் ஈடுபட உள்ளனர்.